முறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-1

ஏற்கனவே ஊழலை பற்றி நாமும் மற்ற சக பதிவர்களும் எழுதியதில் ஊழல்வாதிகள்
எல்லாரும் திருந்திவிட்டதால் மற்ற பிரச்சினைகளை பற்றி எழுதலாம்
என்று இதனை ஆரம்பித்து உள்ளேன்.
நம் நாட்டில் முறைபடுத்தபடாத பல விடயங்கள் இருக்கின்றன. அதனை பற்றி அலசுவதற்கே இந்த பதிவு. சிறு உதாரணத்திற்கு பெட்ரோல் விலையேற்றம் ஏறிக்கொண்டே சென்றாலும் அரசு இரு மடங்கு ஏற்றினாலும் அதை அப்படியே மற்றவர்களும் செய்கிறார்கள். பெட்ரோல் விலை ஏறும்போது ஒரு முறையும் அரசு பேருந்து கட்டணம் ஏறும்போது ஒரு முறையுமாக ஏற்றினால் என்ன அர்த்தம்? ஷேர் ஆட்டோவில் கிண்டியில் இருந்து ராமாபுரம் சந்திப்பிற்கு முன்னர் பத்து ரூபாய் என்றால் இப்போது இருபது ரூபாய். தட்டி கேட்க முடியாது. அரசு ஏற்றினால் மட்டும் கேட்கிறீர்களா என்ன என்பது தான் அவர்களின் கேள்வி. அது சரி! இதற்கு முன்னர் பேருந்தில் ஐந்து ரூபாய் இப்போது எட்டு ரூபாய் என்று இருக்கிறது என்றால் ஷேர் ஆட்டோவில் இருமடங்கு ஏற்றியதற்கு அரசே ஆதரிக்கிறதா இல்லை இதனை யார் அங்கீகரிகிறார்கள்? இது ஒரு உதாரணம் தான். உண்மையில் இது வெளியில் தெரிவது. தெரியாமல் இருப்பவன ஏராளம்.

எல்லா விடயத்திலும் ஜப்பானை போல் நாமும் இருந்தால் என்ன என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்? ஜப்பானில் நூற்றில் தொண்ணூறு சதம் மலையும் அதனை சார்ந்த பகுதியுமாக இருக்கின்றது.இதில் சில மலைகளில் உறங்கும் எரிமலைகள் இருக்கின்றன. அதனால் மக்களுக்கு என்ன என்ன அடிப்படை தேவைகளோ அதனை அரசே முன்னின்று செய்கிறது. அதாவது ஒரு வீடு என்றால் அதற்கு தேவையான மின்சாரம், எரிவாயு மற்றும் தண்ணீர் போன்றவற்றை அரசே தருகிறது. ஒரு வீட்டின் பயன்பாட்டிற்கேற்ப அதற்கு கட்டணம் அரசிற்கு கட்ட வேண்டும். நம் அரசுகளோ இந்த மூன்றையும் தன்னுடைய முழு கட்டுபாட்டில் வைத்து கொள்ளாமல் தனியாரிடம் சிலவற்றை நேரடியாகவும் பலவற்றை மறைமுகமாகவும் கொடுத்து உள்ளன. அதனால் எதனையும் முழுவதுமாக அரசினால் கட்டுபடுத்த முடியாமல் இருக்கின்றன.அப்படி கட்டுபடுத்த முடியாமல் இருப்பது அடிப்படை தேவைகள் மட்டும் இல்லை. அதனையும் தாண்டி சிலவற்றை கட்டுபடுத்தாமல் விட்டு உள்ளோம். அந்த சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்.


 
 
முதலில் தெரிவது நிலம்.


நம் நாட்டில் நூறு சதம் முறையாக வடிவமைக்கப்பட்டு உருவான நகரங்கள் எதுவும் இல்லை. இதிலென்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள். இப்போது சென்னையின் நகர எல்லை தாம்பரம், சோழிங்கநல்லூர், ராயபுரம், அம்பத்தூர் என்று எடுத்து கொள்வோம்.இந்த எல்லைகளுக்குள்ளே எந்த ஒரு பகுதிக்காவது முழுமையான சாலை வசதி இதுவரை செய்து கொடுக்கப்பட்டு உள்ளதா? அப்படி செய்து கொடுக்க அவர்களால் முடியாத பொழுது ஏன் மேலும் குடியிருப்புகள் அமைவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். ஏற்கனவே அனுமதி கொடுத்து குடியிருப்புகளோ அல்லது வீடுகளோ கட்டி கொண்டு குப்பைகள் போல சாலைகளிலும், சரியே அமையாத அடிப்படை வசதிகளுடனும் வாழ்பவர்கள் இருக்கும் நிலையில் ஏன் அப்படி ஒரு நிலையினை மேலும் பெருக்க வேண்டும்?

இப்போது சென்னைக்குள் இருக்கும் விளைநிலங்கள் என்று பார்த்தால் ஒரு சதம் இருக்கிறது. அதை தவிர பசுமைபகுதி அல்லது காடு என்று பார்த்தால் எட்டு சதம் இருக்கிறது. இதனை தவிர மற்ற நிலங்களிலும் இப்போது இல்லையென்றாலும் இன்னும் இருபது வருடங்களில் எப்படியும் கட்டிடங்களோ அல்லது வீடுகளோ கட்டி விடுவார்கள். அதற்கு பின்னர் என்ன செய்வார்கள்? முதலில் இருக்கும் தனி வீடுகளை இடித்து விட்டு அதன் மேல் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டினால் ஒழிய எதிர்காலத்தில் ஏற்பட போகும் இட நெருக்கடியை சமாளிக்க முடியாது. அப்படி எல்லாருமே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொண்டு அங்கே குடியேறினால் கூட அதற்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரவிருக்கும் இட நெருக்கடியை சமாளிக்க முடியாது.




இப்போது சென்னையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை இரண்டு கோடிக்குள் வருகிறது. இங்கே வேலை தேடிவருபவர்களால் மக்கள் தொகை அதிகமாகிறது என்றால் அதையே ஏன் அவர்கள் அங்கே செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க கூடாது. மென்பொருள் துறையில் வேலை செய்ய இங்கே இருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் மற்ற நிறுவனங்களில் வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் அது ஒரு அறுபது லட்சம் வருகிறது.


எந்த ஒரு மென்பொருள் நிறுவனமாவது சென்னையை தவிர மற்ற இடங்களில் நிறுவனங்களை நடத்த முடியாது என்று சொல்லுகிறார்களா என்ன? அப்படியில்லை. அவர்கள் எதிர்பார்க்கும் வசதிகள் எங்கு இருந்தாலும் அவர்கள் அங்கே தங்கள் நிறுவனங்களை நடத்த தயாராக இருக்கிறார்கள். அப்படி ஏற்படுத்தி கொடுத்தால் இங்கே இருக்கும் நிறுவனங்கள் வறட்சியில் இருக்கும் பல மாவட்டங்களுக்கு கொண்டு சென்று அந்த மாவட்டங்களில் நிறுவனங்களை நடத்தினால் சென்னையினை நோக்கி மக்கள் வருவது நிறுத்தப்படும். அந்த மாவட்டங்களில் அப்படி உருவாகும் நகரங்கள் முழுவதுமாக வடிவமைப்பு செய்த பின்னர் அதனை கட்டுபடுத்த முடியும்.

முறையான சட்டங்கள் இதற்கு மட்டும் அல்ல பல இடங்களில் தேவைபடுகிறது. நிலம் தொடர்பான மற்ற விடயங்களை அடுத்த பதிவிலும் தொடர்கிறேன்.

3 Response to "முறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-1"

  1. bandhu says:

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.. தொடருங்கள்.

    Hema says:

    அடுத்த பதிவுல நில அபகரிப்பு பத்தி எதிர் பார்க்கலாமா???

    ஹேமா அது எப்படி உங்களுக்கு தெரியும்?

Popular Posts