Showing posts with label 2010. Show all posts
Showing posts with label 2010. Show all posts

2010ஆம் வருடம் நான் எழுத மறந்தவை

ஒவ்வொரு வருடமும் பல விஷயங்களை கடந்து வந்திருப்போம். அதில் ஒரு சில விஷயங்கள் என்னை மிகவும் பாதித்து இருக்கின்றன. ஆனால் அந்த விஷயங்களை எழுதுவதற்கு முன்னரே பலர் அதனை பற்றி எழுதி இருந்தாலும் நான் எழுதவில்லை என்பது தானே உண்மை. சில விஷயங்களை எழுதி பின்னர் நான் பதிவாக போட்டும் நான் வெளிவிடவில்லை. அப்படி காலங்கடந்த பதிவுகளை பற்றிய ஒரு பதிவு தான் இது. (இப்பவே கொட்டாவி வருது. அப்புறம் அடுத்தவருட பதிவில் தான் இந்த பதிவை பற்றி போட வேண்டிருக்கும்).


முதல் பதிவு சின்னஞ்சிறு குழந்தைகளை கொன்ற பாதகன் பற்றிய பதிவு. இதனை பற்றி எழுதினாலும் அதில் பல விஷயங்கள் நெருடலாகவே இருக்கின்றன. உண்மையான குற்றவாளி அவன் தான் என்றால் சுட்டுகொன்ற காவல்துறைக்கு கோவில் கட்டலாம். ஆனால் மோகன்ராஜ் முதல்நாள் தான் இதில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு இருந்தனர் என்று கூறினான்.
 
இரண்டாம் பதிவு நீதிமன்ற தூக்குதண்டனையில் இருந்து தப்பித்து ஆயுள் தண்டனை என்று அறிவித்து இன்னும் விடுவிக்கபடாமல் இருக்கும் நளினி பற்றியது. இதில் ஆயுள்தண்டனை என்பதற்கான வரையறையை வலியுறுத்தி அந்த பதிவை எழுதினேன். முடிக்க முடியவில்லை. பல விஷயங்கள் புதிராகவே இருந்தன.( பெருந்தலைகள் எல்லாம் உலாவிக்கொண்டு இருக்கையில் இவரை போன்றவர்கள் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க போகிறாரா?).


மூன்றாவது பதிவு சீமான் பற்றியது. பெரியார் திராவிடகழகத்தை போல் ஈழத்தமிழர்கள் விடயத்தில் நேர்மையாக போராடுபவர்களில் சீமானும் அடக்கம். அவரின் போக்கினை கண்டித்து ஒருவர் எழுதி இருந்தார். அவரின் கருத்திற்கு மறுப்பு கூறும் வகையில் அந்த பதிவு இன்னும் வெளியிடபடாமலே இருக்கின்றது.



நான்காம் பதிவு ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த வெற்றிவேல் படுகொலை(ஜனவரி 7, 2010) பற்றியது. காலம் கடந்து எழுதினாலும் மனிதம் கேட்டுவிட்டது என்று  கூறுவதற்காக எழுதினேன். ஆனால் முடிக்கவில்லை.கண்முன்னர் உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவர் வெட்டுபட்டால் எப்படி துடிப்பீர்கள். அதில் ஒரு சதவிதமாவது அங்கே வேடிக்கை பார்த்தவர்கள் துடிக்கவில்லையே என்பது தான் எனது ஆதங்கம்.

ஐந்தாம் பதிவு பிரபாகரனின் தாயாரை இந்திய அரசு சென்னை விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பியது(ஏப்ரல் 17) பற்றியது. காலங்கடந்து பேசினாலும் அம்மாவை அத்தை என்று நாம் அழைப்பதில்லை. நம் அம்மா வயதை ஒத்த ஒருத்தருக்கு நடந்த அநீதி பற்றிய அந்த பதிவில் அவர் எழுதியதாக தமிழக அரசு கூறிய கடிதம் போலியானது என்று கூறியிருந்தேன்.


ஆறாம் பதிவு பெரியாரின் கொள்கைகளை காப்பாற்ற நினைக்காமல் தனக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடும் வீரமணியை பற்றியது. இவர் எப்போதுமே அந்த காலகட்டத்தில் இருக்கும் ஆளும்கட்சிகளின் அடிவருடியாக இருப்பார். பெரியாரின் கருத்துக்கள் மட்டும் அல்ல அவரின் புத்தகங்களும் தனக்கே சொந்தம் என கொண்டாடி பின்னர் நீதிமன்றத்தினால் குட்டு வாங்கினார். இன்னமும் இவரை நம்பும் தொண்டர்களை என்னவென்று சொல்வது.




இப்படி எழுதிய பல பதிவுகளை வெளியிடாததற்கு வரும் கண்டனங்களை நான் வரவேற்கிறேன்

Popular Posts