களமாடியவர்களும் கழகத்தில் ஆடியவர்களும்

 ஈழ தமிழர்கள் பற்றிய நினைவுகள் எனக்கு அடிக்கடி வந்து தொல்லை செய்கின்றன.அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அதன் மூலம் தான் நான் ஒரு கேடுகெட்ட ஒரு ஜனநாயக நாட்டில் இருப்பதை பற்றிய புரிந்துணர்வுக்கு கொண்டு வந்தது.எனக்கு ஈழத்தில் நடந்த அந்த உக்கிர போரின் தீவிரம் 2008யின் முற்பகுதியில் தெரிய ஆரம்பித்தது. இங்கே அதனை பற்றி அப்போது பேசியவர்களும் இப்போதும் பேசிக்கொண்டு
இருப்பவர்களுமான பழ நெடுமாறனும் வை.கோவும் அப்போது இருந்த அரசுகளிடம் கெஞ்சித்து கொண்டு இருந்தார்கள்.நெடுமாறன் அவர்கள் அப்போது ஒரு கோடி ரூபாய் அளவுக்கு பணம் திரட்டி அங்கே ஈழத்தில் உள்ளவர்களுக்கு கொண்டு சேர்க்க முயற்சி செய்தார். விஷயம் கொஞ்சம் கொஞ்சம் தீவிரம் ஆனது.தா.பாண்டியன் இந்த விஷயத்தை கையில் எடுத்த பின்னர் சூடு பிடித்தது.நான் அதுவரை மீடியா பற்றி வேறு விதமாக யோசித்து வைத்து இருந்தேன். மீடியா என்பது ஒரு பொதுவான அமைப்பின் கொள்கையோடு நடுநிலைமையோடு இருக்கும் என்று. ஆனால் நடந்தது வேறு.

மக்களிடம் எதையும் கொண்டு சேர்க்க வேண்டிய மீடியா மற்றும் பத்திரிக்கை துறையினர் இதை அடக்கி வாசித்து பத்திரிக்கை தர்மத்தினை நிலை நாட்டினர். வேறு சிலர் தவறான கருத்துகளோடு தங்களின் சொந்த கருத்துக்களையும் ஊட்டி வளர்த்தனர். இந்த வளர்ச்சியில் இங்கே குளிர் காயும் ஆடுகளின் எண்ணிக்கைகள் அதிகம் ஆனது. நெடுமாறன் சேமித்த அந்த பொருட்கள் கடைசியில் குப்பைக்கு சென்றன. ஆனால் ஒரு சிலர் அனுப்பிய குப்பைகள் அங்கே மக்களுக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இவர்கள் அனுப்பிய அந்த பொருட்கள் மக்களிடம் தான் போய் சேர்ந்ததா என்று யாரும் சரி பார்க்கவில்லை. சரி பார்க்கவும் தேவை இல்லை.நாம் செய்யவேண்டியது என்ன? ஒரு பிரச்சினை கொழுந்துவிட்டு எரியும்போது செய்யும் காரியங்களினால் நமது கழகத்திற்கு என்ன நன்மை என்பதையே பார்க்கும் கட்சியினர் இங்கே அதிகம். ஒரு கழகம் பல நாடகங்களை நடத்தியது.

அனைத்து கட்சிகள் கூட்டம்(14.10.2008 மாலை 4.30):
எல்லா மாநிலங்களிலும்  பொதுவான பிரச்சினைகளில் ஒன்று கூடி தேர்  இழுக்கும் கட்சிகளை பார்க்கலாம். நம் தமிழ்நாட்டில் அது மட்டும் நடக்கவே நடக்காது.  அப்படி ஒரு முயற்சி தான் இந்த அனைத்து கட்சி கூட்டம்.கூட்டத்தின் முடிவில் இப்போதைய முதல்வர் கருணாநிதி
தமிழ்நாட்டினை சேர்ந்த 40 எம்பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவித்து அறிக்கை விட்டார்.

MPகள் ராஜினாமா: இதன் பின்புலம் என்னவென்று பின்னர் தான் தெரிந்தது. ஒரு தமிழ்நாட்டினை சேர்ந்த மத்திய அமைச்சரை காப்பாற்ற இவர்கள் செய்த நாடகம் தான் இது என பின்னாளில் கூறப்பட்டது.இது உண்மையில் என்னை மிகவும் கவர்ந்த நாடகம். முதலில் இதை கேள்விப்பட்டு இப்படி ஒரு தலைவன் நமக்கு கிடைக்க நாம் என்ன புண்ணியம் செய்தோமோ என்று நினைத்தேன். அப்புறம் எல்லாம் பூச்சாண்டி காமிச்சாங்க என்பது தெரிந்தது.

மனித சங்கிலி(அக்டோபர் 24, 2008):
 எல்லா கட்சிகளும் கலந்து கொண்ட இந்த மனித சங்கிலி உண்மையில் ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி. கார் லோன் வாங்க போன ஒருவன் அது கிடைக்காமல் அந்த காரின் சாவிக்கு லோன் கேட்ட வரலாறு அன்றைக்கு தான் நடந்தது. எல்லாருக்கும் தெரியும் இது எல்லாரையும் நம்பவைக்கும் ஒரு முயற்சி என்று. ஆனால் எதிர்த்து கேட்க தான் துணிவில்லை.
அதன் பின் நடந்த போராட்டங்கள் எல்லாம் மக்களை வாக்காளர்களாக மட்டுமே பார்த்தவர்கள் செய்த நாடகங்கள்.
 திருமாவளவன் நடத்திய உண்ணாவிரத போராட்டமும் அதன் பின் நடந்த வன்முறைகளும் அரசியலில் அவரின் இருப்பினை உறுதி செய்தது. ஆனால் உயர் நீதி மன்றத்தினுள் நடந்த அந்த தாக்குதல்கள் அரசின் உண்மையான முகத்தினை உலகுக்கு காட்டிற்று. இங்கே எல்லாருமே போராட்டம் நடத்தினார்கள் ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்று தனித்தனியே . ஆனால் யாரை எதிர்த்து என்பது தான் இங்கே கேள்வியே?
திருமாவளவன் ஆளும்கட்சியில் இருந்து ஆளும்கட்சியினை எதிர்த்து போராட்டம் நடத்தினார். இதன் விளைவுகள் என்று பார்த்தால் இனிமேல் ஈழம் சம்பந்தமாக எந்த போராட்டமும் நடத்த கூடாது என்று அரசே உத்திரவிடும் அளவுக்கு போனது. இது தான் திருமாவளவன் எதிர்பார்த்தாரோ என்று யோசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
எல்லாராலும் விமர்சிக்கப்பட்ட மணிநேர உண்ணாவிரதம் நடந்தது. இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகிற்கும் தமிழ்நாட்டின் அரசியல் வியாதிகள் அரசியல் கோமாளிகள் என்பதை மீண்டும் உலகிற்கு பறைசாற்றின. இதைவிடவெல்லாம் கொடுமை என்னவென்றால் அதே ஆளும்கட்சிகளே மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்து வந்ததே. களின் ஆரம்பத்தில் காஷ்மீரில் நடந்த தேர்தலின் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு அங்கே தீவிரவாதம் விதைக்கப்பட்டது. அதையே தமிழ்நாட்டில் இப்போது விதைத்து விட்டு உள்ளார்கள். இங்கே விதைத்தது தீவிரவாதம் அல்ல. ஆனால் பணம் இருந்தால் யாரும் ஜெயிக்கலாம் என்ற ஒரு பணநாயக கருத்தினை முன்மொழிந்து போயுள்ளார்கள்.
 இனிமேல் நடக்கும் எந்த ஒரு தேர்தலும் இப்படி தான் இருக்கும் என்பதை நான் சொல்லி தெரிய போவதில்லை.
முதல்வன் படத்தில் ஒரு காட்சி வரும் அதில் பேருந்து ஒன்றில் பயணிக்கும் ஒருத்தருக்கும் அந்த பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கும் நடக்கும் அந்த தகராறு இப்படி பெரிதாகிறது என்பதை காட்டி இருப்பார்கள். கடைசியில் அந்த பயணியின் நிலைமை என்னவென்று பார்க்க ஆள் இல்லாமல் போயிருக்கும். நாம் எதற்க்காக போராடுகிறோம் என்றே தெரியாமல் இவர்கள் போராடியதன் விளைவுகள் பல மறைக்கப்பட்டுள்ளன.




போராளிகளின் குடும்பங்களை சேர்ந்த பலர் தப்பித்து இந்தியா வந்தவண்ணம் இருந்தனர். இங்கே அப்போது ஆளும்கட்சியில் இருந்த ஒரு கட்சியிடம் 3000 போராளிகளின் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த கட்சியும் கூட்டணி தலைமையை கேட்டு சொல்லுவதாக கூறியது. இன்னும் அந்த வேண்டுகோள் அவர்களின் சீரிய பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது. இப்போது அந்த போராளிகளின் குடும்பங்கள் என்னவானார்கள் என்பதை இவர்களுக்கு நாம் தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு இவர்களின் ஞாபக மறதி நோய் வளர்ந்துள்ளது.



மேலும் ஒரு நிகழ்ச்சியை சொல்வதென்றால் இங்கே வருகின்ற ஈழ தமிழர்களை சிங்கள ராணுவம் எந்த அளவுக்கு துன்புரித்தியதோ அதைவிட இங்கே அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். காட்டிகொடுக்கபட்ட பல போராளிகள் எப்படி என்று தெரியாமல் இருந்தனர். ஆனால் அவர்களை காட்டி கொடுத்தது இங்கே போராட்டம் நடத்திய ஒரு நல்ல கட்சியின் தலைமை தான்.
 
அங்கே களமாடியவர்கள் போதும் என்று இப்போதற்க்கு ஓய்ந்து போய்விட்டார்கள் ஆனால் அவர்களின் பெயரை சொல்லி இன்னும் இங்கே வசூலிக்கும் பணத்தில் வீடு வாங்கிய அன்பர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்கள். வியாபாரம் தான் நோக்கம் என்றால் வேறு எதாவது சொல்லி பிழைக்க வேண்டியது தானே. மக்களின் பிணங்களின் மேல் ஏறி இப்படி நரமாமிசம் தின்றவர்களை என்னவென்று சொல்லுவது. இவர்களின் ஒரே ஒரு நோக்கம் மக்களை காப்பாற்றுதல் இல்லை. இவர்களின் வியாபாரத்தினை விரிவுபடுத்தியதும் 
 மற்றவர்கள் நடத்தும் போராட்டங்களை கொச்சை படுத்தியதையும் தவிர இவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
    ஜாக்கிரதையாக இருங்கள் ஈழ தமிழர்களே உங்களின் ரத்தத்தினை உறிஞ்சும் அட்டைகள் இலங்கையில் மட்டும் இல்லை. தமிழத்திலும் தான் இருக்கிறார்கள்.

0 Response to "களமாடியவர்களும் கழகத்தில் ஆடியவர்களும்"

Popular Posts